Monday, 12 March 2012

நிஜமாக

வருடந்தோறும்
தீபாவளி பொங்கல் 
அதைப் போலவே 
மகளிர் தினமும் 

ஒரு நாள் கூட்டத்தில் ,
பெண்ணுரிமை  பேச்சுக்கள் 
முடிந்தது
மகளிர் தினம் 

சந்திக்கின்ற கொடுமைகளை,  
சரிவுச் சடங்குகளை
சாய்ப்பதும் மிதிப்பதும்
பற்றி சிந்தித்தோமா ?
சினம் கொண்டோமா ?

படிப்பும் பதவியுமா, 
பெண்ணுரிமை ?
சக மனுஷியாய் 
உணர்வுகளை 
மதிப்பதல்லவோ 

அடர்ந்த மரங்களின் 
இலைகளின் ஊடே 
எட்டி பார்க்கும் 
வெளிச்ச கீற்றாய் தான் 
இன்று பெண்ணுரிமை  

ஆராதனைக் கூடங்களுக்கு  
மூடு விழா இல்லை
ஆடைகளில் மட்டும் 
சரி நிகர் சமானம் 

போராட்ட குணத்தை 
புதைத்து, 
விழிப்புணர்ச்சியை 
தொலைத்து,
தன்னம்பிக்கையை 
பதுக்கி 
சொந்தக்காலை
வெட்டிவிட்டோம் 

சிறகுகள் வளர்ந்தும் 
பறக்கத் தடுமாறுகிறோம். 
சிவப்பிலும் கறுப்பிலும் 
சிதைந்தோம். 

இமயமாய் 
நிமிர வேண்டிய நாம்,
இடுக்குகளில் மட்டும் 
வாசம் செய்கிறோம். 

விதிகள் சரித்திரங்கள் 
அல்ல, 
மாற்றி  எழுதக்  கூடிய  
வழித் தடங்களும் கூட.

நிழலாக வாழ்ந்தது போதும்
இனியேனும் 
நிஜமாக வாழ்வோம். 


3 comments:

  1. Nice post :) Guess the women should read it to reaffirm their value and the men should read it to value their opposite gender.

    ReplyDelete